Tuesday 13 December 2016

பாரதியார் நாள் விழா ! கரூர் திருக்குறள் பேரவையும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் இணைந்து கொண்டாடியது ! சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பாடியவன் பாரதி ! கரூரில் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு !






கரூர் திருக்குறள் பேரவையும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கமும் இணைந்து பாரதியார் நாள் விழா 324 ஏ 2 அரிமா மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது. கரூர் நகரத்தார் மண்டபத்தில் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட ஆளுநர் டாக்டர் பி.வெங்கட்ராமன், சிறப்பு விருந்தினர் திருப்பூர் கிருஷ்ணன், மாவட்ட தலைவரும், கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பன் மற்றும் அரிமா மாவட்ட தலைவர்கள் சூர்யா வே.கதிரவன், பி.என்.அனந்தநாராயணன், எஸ்.எஸ்.வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கும், பிரபல பத்திரிக்கையாளர் துக்ளக் சோ, அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பாரதியார் படத்திற்கு மலர் தூவி பாரதியின் உணர்வுகளை போற்றினர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாரதியார் வேடமிட்டு வந்த மாணவர்கள், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மார்னிங் ஸ்டார், குளித்தலை பாரதி வித்யாலயா, காந்திகிராமம் சீனிவாசா பள்ளி, தொழிற்பேட்டை சக்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும், 40 படைப்பாளர்களுக்கும் பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டது. ஆளுநர் வெங்கட்ராமன் துவக்க உரையாற்றி மாவட்ட தலைவர் மாவட்டத் தலைவரும், கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பனுக்கு மாவட்ட லயன்ஸ் சார்பில் பாராட்டு விருது வழங்கினார்.
இதை தொடர்ந்து திருப்பூர் கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது., அரிமா கொண்டாடும், பாரதி விழா மிகுந்த பாராட்டுக்குரியது. ஜாதியை வெறுத்து சமத்துவத்தை பாட்டில் காட்டியவன், பாரதி ! நாத்திகமும் ஆத்திகமும் இணைந்து பணி செய்யப் பாடியவன் பாரதி, தன் சிறுகதையில் அற்புதமாகச் சொல்கிறான். முருகன்., வள்ளி., தெய்வானை., உற்சவர் ஊர்வலம், அன்றைக்கு குறவர்கள் தான், சாமி தூக்கியிருக்கின்றார்கள், ஊர்வலத்தில் பட்டர் மீது சாமி தூக்கிய குறவன் கை படுகின்றது, ச்சீ என்கின்றார் பட்டர், கிளிக் என்று ஒரு நகைச்சுவைக்குரல் யார் அது ? முருகன் அருகில் இருக்கின்ற வள்ளிக்குறத்தி சிரித்த சிரிப்பொலியாம் அது., முருகனுக்கு அருகிலேயே நான் இருக்கின்றேன், ஆனால் குறவனின் கை பட்ட போது ஏன் ? வெறுக்கிறீர்கள் என்பதாக சிரிப்பு அமைந்தது என்கிறார் பாரதி ! அப்படி ஜாதியை வெறுத்து சமத்துவத்தை பாட்டில் காட்டியவர் தான் பாரதியார் என்றார் !
மேலும் இந்நிகழ்ச்சியில் கடவூர் மணிமாறன் அருணா பொன்னுசாமி, எழில் ஒவியா, நாமக்கல் நாதன், நாவை சிவம் உள்ளிட்டோர் ஏற்புரையாற்றினார்கள். கரூர் அரிமா மாவட்டத்தலைவரும், திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றதோடு, நன்றியுரையையும் ஆற்றினார்கள். மேலும் தமிழ் ஆர்வலர்கள், முனைவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment