Saturday 31 October 2015

மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்தி கொடுத்த உத்தமி போயஸ் கார்டனில் உல்லாசம்' என்ற கோவனின் பாடலை பாடி, முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடட்டும் என்று திருச்சியில் வைகோ தமிழக அரசுக்கு பகிரங்க சவால். - சிறுபான்மையினர், தலித்துகள் மீது தாக்குதல்: திருச்சியில் வைகோ, திருமா, முத்தரசன் கண்டன போராட்டம்!!



நாடு முழுவதும் அதிகரித்து வரும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருச்சியில் மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா ஆட்சியில் அதிகரித்து வரும் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைகள்; கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டி.கே.ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, டாஸ்மாக்கை மூடக் கோரி பாடல் வெளியிட்ட ம.க.இ.க. பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது. அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றார். மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்தி கொடுத்த உத்தமி போயஸ் கார்டனில் உல்லாசம்' என்ற கோவனின் பாடலை பாடி,
முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடட்டும் என்று
திருச்சியில் வைகோ தமிழக அரசுக்கு பகிரங்க சவால் விடுத்தார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ.

பச்சிளம் பள்ளிக்குழந்தைகளுக்கு வெயில் இன்ஸ்பெக்டருக்கு குளு, குளு கூலிங்கிளாஸ் - பள்ளி குழந்தைகளை வெயிலில் நிற்க வைத்து பாடம் நடத்திய கூலிங் கிளாஸ் போட்ட போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் – கரூரில் பரபரப்பு



தமிழகம் முழுவதும் ஹெல்மெட் விவகாரம் தலைதூக்கிய போது தற்போது அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டுமென்பது அவசியம் என அனைத்து தர்ப்பினரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஹெல்மெட் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரில் மட்டும், தமிழக அளவில் ஹெல்மெட் பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சாதனை எனவும் கருத்தில் கொள்ளலாம். இந்நிலையில் கரூரில் உள்ள சராசரி மனிதர்கள் தங்களது சட்டதிட்டங்களை மதிக்க மாட்டுகிறார்கள் என கருதிய போக்குவரத்து துறை போலீஸார் காவல் துறை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல் பள்ளி பயிலும் சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு நீங்கள் தான் உங்கள் அப்பா, அம்மா விடம் சொல்லி ஹெல்மேட் போடச்சொல்ல வேண்டுமென வலியுறுத்தினார். ஹெல்மெட் குறித்த பிரச்சாரம், பாதையை எப்படி கடப்பது, போக்குவரத்து விதிகளை மதிப்பது எப்படி என்பதையும், சிக்னலில் கடைபிடிக்க வேண்டிய விதிகளையும் விவரித்துக் கூறினார். இந்த பிரசாரம் வித்யாசமாகவும், நூதனமாகவும் இருந்தது ஒரு பட்சத்தில் இருந்தாலும் கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல் அப்பாவி குழந்தைகளை வறுத்தெடுத்த காவல்துறைக்கு பல்வேறு கட்சி மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்நிகழ்ச்சியில் உங்கள் அப்பா, அம்மாவை ஹெல்மெட் அணிய செய்யுங்கள் போக்குவரத்து போலீஸார் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு அடையும் வகையிலும், போக்குவரத்து விதிகளை பற்றியும் நூதனமாக விழிப்புணர்வு செய்யப்பட்டது. கொளுத்தும் வெயிலுக்கு உதாரணமாக அவர் கூட கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெ., திறந்துவைப்பதாக இருந்த தாமரைகுளம் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது (சிறப்பு படங்களுடன்)



நாகப்பட்டினம் தாமரைகுளம் தடுப்பு சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது. இது  சுமார் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த குளம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பற்காக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினம் நகரத்தின் மையத்தில் இருக்கும் தாமரைக்குளத்தை அழகுபடுத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரவிருந்தது.  2 கோடி மதிப்பீட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் இந்த அழகுபடுத்தும் பணிகளை தொடங்கிவைத்தார்.  முன்னாள் கலெக்டர் முனுசாமி, தற்போதைய கலெக்டர் பழனிசாமி மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வந்தன.  முதல்வர் ஜெயலலிதா இந்த குளத்தை திறந்துவைப்பதாக இருந்தது.  இந்நிலையில் தாமரைக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மது விற்பனை செய்யும் ஆட்சியாளர்களிடம் மனிதத் தன்மையை எதிர்பார்க்க முடியாது ! பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு


பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் மிகப்பெரிய சீர்கேடாக மது உருவெடுத்திருக்கிறது. மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதைத் தான் கோவன் அவரது பாடலில் விவரித்திருக்கிறார். கோவனின் பாடலில் உள்ள சில ரசனைக் குறைவான வார்த்தைகளை ஆதரிக்க முடியாது.
அதே நேரத்தில் மதுவால் தமிழ்நாட்டில் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பாடல்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் உண்மையானவை. இந்த உண்மையை கூறியதற்காக ஒருவர் மீது தேசத் துரோக வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. அடுத்தகட்டமாக கோவனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இது மனிதத் தன்மையற்ற செயலாகும். மது விற்பனையையே கடமையாகக் கொண்ட ஆட்சியாளர்களிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.
தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதாக கூறி மாறி மாறி ஆட்சி செய்யும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மதுவைக் கொடுத்து மக்களுக்கு செய்த தீமைகள் மன்னிக்க முடியாதவை. டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மதுவைக் கொடுத்து பறித்திருக்கிறார்கள்.
தமிழக அரசே மது விற்கத் தொடங்கியதற்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை சரி செய்வதற்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மக்களால் செலவிடப்பட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 28 லட்சம் பேர் மது போதையால் இறந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் கைம்பெண்கள் ஆன கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிறுவர்களும், பெண்களும் புதிதாக மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.
மது விற்பனையால் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், அதனால் பயனடைபவை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான். காரணம் தமிழகத்தில் விற்பனை செய்யப் படும் மதுவில் 80 விழுக்காட்டை தயாரிப்பவை இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் தான். மது போதைக்கு மக்களை அடிமைகளாக்கிய இரு கட்சிகளும் அதன் மூலம் கிடைக்கும் பணத்திற்கு அடிமையாகி கிடப்பதால் ஒரு போதும் அக்கட்சிகளின் அரசுகள் மதுவிலக்கை கொண்டுவராது. மாறாக, மதுவுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்குவதில் தான் கவனம் செலுத்தும்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே மதுவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வின் பயனாக மதுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், உளவுத்துறை மூலம் சில அரசியல் கட்சிகளின் உதவியுடன் அந்த போராட்டத்தை தமிழக அரசு திசை திருப்பி மழுங்க அடித்தது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசுகள் இதைத் தான் செய்யும்; இதைத் தான் அவர்களால் செய்ய முடியும். அக்கட்சிகளால் போராட்டங்களையும், போராட்டக் காரர்களையும் ஒடுக்கத் தான் முடியுமே தவிர, மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய முடியாது.
அதே நேரத்தில், மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய யாரால் முடியும் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மக்கள் தங்கள் உணர்வை வாக்குகளாக வெளிப்படுத்தும் போது மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த சக்திகள் மண்ணை கவ்வுவார்கள் என தெரிவித்துள்ளார்

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் வைகோ அறிக்கை


ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் ஊழல் செய்து சொத்துக்களை வாங்கிக் குவித்த வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதும், உச்ச நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் மன்றம் மறந்துவிட வில்லை. இந்நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள பிரபல லக்ஸ் திரையரங்க வளாகத்தை ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி பட்டவர்த்தனமாக வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
சென்னையில் எஸ்.பி.ஐ. சினிமாÞ நிறுவனம் திரைப்படங்களைத் திரையிடும் பல திரையரங்குகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்கங்களுடன் கூடிய பிரம்மாண்டமான லக்Þ திரையரங்கு வளாகம் இருக்கிறது.
தற்போது எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் தனக்குச் சொந்தமான லக்ஸ் திரையரங்க வளாகத்தை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்திருக்கிறது. ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் இதற்கு முன்பு ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடட் என்று இயங்கியது. இந்நிறுவனம் 2005 இல் தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஜூலை 14 இல் நடந்த இந்நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ‘ஜாஸ் சினிமாÞ’ என்று பெயர் மாற்றப்பட்டதாக ஆதாரபூர்வமான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்புப் பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கலந்துகொண்டதும், நிறுவன பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தில் சசிகலா கையெழுத்துப் போட்டிருப்பதும் ஆவணங்கள் மூலம் வெள்ளிடை மலையாக தெரிகிறது.
ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தையப்பர், சத்தியமூர்த்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருமே டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வரும் மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரிஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் உள்ளனர். மிடாஸ் நிறுவனம் சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது உலகறிந்த இரகசியம்.
எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் பி.வி.ஆர். சினிமாஸ் என்ற நிறுவனத்தால் ரூ.600 கோடி முதல் ரூ.1000 கோடி வரையில் விலை பேசப்பட்டதாகவும், ஆனால், சசிகலா சம்பந்தப்பட்டுள்ள ஜாஸ் சினிமாஸ் அதே அளவு தொகைக்கு வாங்கி உள்ளது என்பதும் ஆவணங்கள் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி டி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிடும்போது, “அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டும் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பை தகர்த்துவிடும்” என்று சுட்டிக் காட்டினார்.
நீதிமன்றத் தீர்ப்புகளை துச்சமாகக் கருதி காலில் போட்டு மிதித்துவிட்டு, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் ஆட்சி அதிகாரத்தின் மூலம் கொள்ளையடித்துள்ள கோடானு கோடி ரூபாயைப் பயன்படுத்தி சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் என்றால், சந்தேகத்தின் நிழல் முதல்வர் ஜெயலலிதா மீதும் படிந்துள்ளது என்பதை மறைக்க முடியாது. எனவே, ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம் ஊழல் மூலம் முறைகேடான வகையில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்

பாடகர் கோவன் தேச துரோக சட்டப்பிரிவில் கைது சம்பவம் எதிரொலி மக்கள் செய்தி மையம் கண்டனம்


தமிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறுமக்கள் அதிகாரம்அமைப்பினர் நடத்திய போராட்டங்களை அறிவீர்கள். இதன் அங்கமாக இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. “மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இன்றளவும் இப்பாடல்கள் மிகப் பிரபலமாக மக்களால் கேட்கப்படுகின்றன. டாஸ்மாக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இப்பாடல்களை வரவேற்றிருக்கின்றனர்.
மதுக்கடைகளை மூட மாட்டோம், தமிழக மக்களை வதைக்காமல் விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு ஏற்கனவே அடக்குமுறைகளை ஏவிவிட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்த மாணவர்கள்மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.
தமிழக மக்களை தாலியறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு என்று சொல்வது தேசத்துரோகமா?
பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை அனைவரும் கண்டிப்போம். டாஸ்மாக்கை மூடும் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம என பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் செய்தி மையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் செய்தி மையம் நிறுவனரும், சென்னையை சார்ந்த மூத்தபத்திரிக்கையாளருமான அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

ஜனநாயகத்தின் குரல்வளை எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை மக்கள் செய்தி மையம் கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் செய்தி மையம் நிறுவனரும், மூத்த பத்திரிக்கையாளருமான அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Friday 30 October 2015

டாஸ்மாக் மூடு பாடல்” சமூக ஆர்வலர் கோவன் கைது..... தமிழக அரசிற்கு, காவல் துறைக்கு நன்றி... இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டுகிறோம். சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை



மூடு டாஸ்மாக்கை மூடுஎன்ற பிரபல டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய சமூக ஆர்வலர் கோவன் இன்று அதிகாலை திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சட்டபஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையின் கழுத்துநெறிக்கும் செயலாகத்தான் இதனைப் பார்க்கிறோம். மேலும், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள், அமைப்புகளுக்கு தமிழக அரசு விடுக்கும் மறைமுக எச்சரிக்கை இது. இனிவரும் காலங்களில், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு இதுபோன்ற திடீர் கைது, சிறைவாசம் பரிசாக அளிக்கப்படும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தக் கைது.

கோவன் அவர்களின் கைதுக்குக் காரணமான பாடல் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது, பகிரப்பட்டுள்ளது என்பதே, மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இப்பாடல் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. டாஸ்மாக் மூடப்படவேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் விருப்பம், கருத்து

இந்த சூழலில் பாடியரைக் கைது செய்துள்ளார்கள். பாடியவரைக் கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம். ஆனால், அவர் மக்களிடம் பரப்பிய கருத்தை..?   பாடலைக் கேட்டவர்களை, பார்த்தவர்களையும் கைது செய்யுமா அரசு..?

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் திறந்து மக்களைச் சீரழிக்கும்மக்கள் துரோகசெயலுக்கு எதிராக குரல் கொடுப்பதுதேசத் துரோககுற்றமா..? 

டாஸ்மாக் எதிர்ப்புப் போரளிகளின் வாயை மூடும் செயலை விடுத்து, டாஸ்மாக்கை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட பஞ்சாயத்து இயக்க முகநூலில் , இப்பாடலைப் பாருங்கள்.. பகிருங்கள் என்று பகிரங்கமாக நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஏராளமான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள்மூடு டாஸ்மாக்கைபாடலை தொடர்ந்து பகிர்ந்து வண்ணம் உள்ளனர். இதுவரை, இப்பாடலைப் பார்க்காத பல ஆயிரம்பேர், இப்போது தேடித்தேடி பார்க்கின்றனர்

இறுதியாக, தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 ”
டாஸ்மாக்குறித்த விவாதத்தை மீண்டும் பரந்துபட்ட மக்களிடம் விவாதப் பொருளாக்கியதற்காக...

இன்னும் பல டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளைக் கைது செய்யுங்கள்.
போராளிகள் படும் தற்காலிகத் துன்பங்கள்... டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடட்டும் என தெரிவித்துள்ளார்.


பருப்பு விலை உயர்வு: மக்கள் நலக் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! வை.கோ அறிவிப்பு


பருப்பு விலை உயர்வு: மக்கள் நலக் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! நவம்பர் 3 தேதி நடத்தப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த ஆண்டு 80 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்தால் தற்போது ரூ.220 அளவுக்கு உயர்ந்து இருக்கின்றது. தீபாவளி பண்டிகை நெருங்குகையில் பருப்புகள் உள்ளிட்ட அன்றாடத் தேவை உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தால், அனைத்துத் தரப்பு மக்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தபிறகுதான், இணையதள வணிகத்தில் பருப்பு வகைகளைச் சேர்த்தது. அதுதான் இந்தத் தாறுமாறான விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இணைய வணிகச் சூதாடிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதால், அவர்கள் பருப்புகளைப் பதுக்கி, விலை உயர்வை ஏற்படுத்திக் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுத்துக் கொடுத்து விட்டார்கள். அதனால்தான் இப்போது, நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் மூலம் 82 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது.

மேலும் பருப்பு விளைச்சல் குறைவு என்று மத்திய அரசு காரணம் கூறுவதை ஏற்க முடியாது. நாட்டில் பருப்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதைப் பற்றி அரசு கவனத்தில் கொள்ளவில்லை. விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்காமல்,  உள்நாட்டில் விளைச்சலைப் பெருக்காததால், இன்றைக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் அயல்நாட்டுச் செலாவணியைக் கூடுதலாகச் செலவிட்டு 7 ஆயிரம் டன் பருப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இறக்குமதியை  நம்பி இருப்பது நிரந்தரமான தீர்வைத் தராது.

இணையதள வணிகமும், முன்பேர வணிகமும், நாட்டில் செயற்கையான முறையில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை ஏற்றத்திற்கு வழி வகுத்து வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரÞ கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகளையே மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதற்கு இதுதான் முதன்மைக் காரணம் ஆகும்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரு நகரங்களில் மட்டும் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு கூறி இருக்கின்றது. 

இதனால் பயன் பெறுவோர் எண்ணிக்கை சில இலட்சம் பேர்களே. யானைப் பசிக்குச் சோளப்பொறி என்பது போல, கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் இந்தத் திட்டம் பயன் தரப்போவது இல்லை. இது ஒரு கண்துடைப்பே ஆகும். 

உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும்;

வெளிச் சந்தையில் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்க வலியுறுத்தியும்;

மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில், நவம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று, அறப்போர் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் ரூ50,000கோடி ஊழல் புத்தகம் வெளியீட்டது மக்கள் செய்தி மையம் - மக்களின் அமோக வரவேற்பை பிடித்து தனி சாதனை





தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தனி இடம் பிடித்துள்ளது மக்கள் செய்தி மையம். சென்னையை சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகனின் முயற்சியில் பல்வேறு ஊழல் புத்தகங்களை ஆதாரத்துடன் தகவல் அறியும் சட்டம் மூலம் வெளியீட்டு வரும் இந்த புத்தகம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.

 மக்கள்செய்திமையத்தின் தமிழக அரசின் ரூ50,000 கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புத்தக வெளியிட்டு சிறப்புரையாற்றிய திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கும், புத்தகத்தின் பிரதியை பெற்றுக்கொண்டு உரையாற்றிய சட்ட பஞ்சாய்த்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ அவர்களுக்கும், இந்தியன் மக்கள் மன்றத்தின் நிறுவனர் வாராகி அவர்களுக்கும், விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் மக்கள்செய்திமையம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளது.
MSM-Book REL THANKS
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
 தமிழக அரசின் ரூ50,000 கோடி ஊழல் புத்தகம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, கரூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், தொகுதிக்கு 100 புத்தகம்  இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
  மேலும் இரண்டு சட்டக்கல்லூரி, நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏழு மேல்நிலைப்பள்ளிகளிலும் 500 புத்தகம் இலவசமாக கொடுக்கும்பணி நடைபெற்று வருகிறது.
 மக்கள்செய்திமையத்தின் அடுத்த ஊழல் புத்தகம் 500 பக்கங்களில் 26.1.16 குடியரசு தினத்தன்று வெளியிடப்படும் என மக்கள் செய்திமையத்தின் நிறுவனர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

ஏ சாமியோ ? நாங்களும் இருக்கம் சாமியோ ? மக்களவை துணை சபாநாயகரிடம் தங்கள் குறைகளை கொட்டி தீர்க்க வந்த நரிக்குறவர்கள் – கரூர் அருகே பரபரப்பு




கரூர் அருகே முற்றுகையிடப்போவதை அறிந்த மக்களவை துணைசபாநாயகர் முந்தியடித்துக் கொண்டு மாற்று வழியில் தப்பினார் – மாஜி அமைச்சரும் தப்பினார் – குடிநீர் கேட்டும், சுகாதார வசதி கேட்டும் நரிக்குறவர் இன மக்கள் திடீர் சாலைமறியலால் பரபரப்பு
கரூர் ,மாவட்டம், மண்மங்கலம் வட்டம், அரசு காலனி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரில் கடந்த பல வருடங்களாக கரூர் நகராட்சியில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லையோடு நீண்ட நாட்களாக சுகாதார சீர்கேட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்  கடந்த சில தினங்களாக தண்ணீர் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதை பற்றி பல முறை மனுக்களாகவும், நேரிடையாகவும் புகார் தெரிவித்த அப்பகுதி நரிக்குறவர் இன மக்கள் சுமார் 100 ற்கும் மேற்பட்டோர் இன்று அரசு விழாவான விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்கு மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ஆகியோர் அப்பகுதியை அடுத்த ரெங்கநாதன் பேட்டை, நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மடிக்கணினி வழங்கி விட்டு கரூர் வந்தார். அப்போது அந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதியை சார்ந்த நரிக்குறவர் இன மக்கள் அச்சமூகத்தை சார்ந்த தலைவர் கஜேந்திரன் தலைமையில் முற்றுகையிட முயன்றனர். இச்சம்பவத்தை அறிந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி வண்டியை வேறு பக்கம் திருப்புங்கள் என்று மாற்று வழியில் சென்றனர். காலிகுடங்களுடன் முற்றுகையில் ஈடுபட முயன்ற நரிக்குறவர்கள் ஏமாற்றத்துடன் இருந்ததுடன், அச்சம்பவத்தை அறிந்த வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் இந்த பிரச்சினை மீது தனிக்கவனம் செலுத்துவதாக கூறி சமாதான படுத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

எது எப்படியோ அவர்களும் மனிதர்கள் தானுங்க ! சட்டசபை உறுப்பினரிலிருந்து பஞ்சாயத்து தலைவர் வரை தங்களது அரசியல் சுய நலத் தேவைக்காக பலமுறை காலில் விழுந்து ஓட்டுகள் வாங்கி குவிக்கும் இவர்களது நலனில் ஏன் மெத்தனம் காண்கின்றனர் என்பது தெரியவில்லை. மேலும் இவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் காலத்திலே இருந்து அ.தி.மு.க வினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை மாஜிக்கு பதவி பறிப்பிற்கு இந்த கூலியா ? என வித்யாசமாகவும் என்னத்தொன்றுகிறது