Thursday 7 January 2016

பொங்கல் பண்டிகை: 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு



பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்பட்டன. அதன்படி, இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு ஜனவரி 9 ஆம் தேதியன்று 482 பேருந்துகளும், ஜனவரி 10 ஆம் தேதி 504 பேருந்துகளும், ஜனவரி 11 ஆம் தேதி 365 பேருந்துகளும், 12 ஆம் தேதி 539 பேருந்துகளும், 13 ஆம் தேதி 1,345 பேருந்துகளும், 14 ஆம் தேதி 1,447 பேருந்துகளும் என மொத்தம் 4,682 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இது தவிர மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து ஜனவரி 9 ஆம் தேதியன்று 516 பேருந்துகளும், ஜனவரி 10 ஆம் தேதி 608 பேருந்துகளும், ஜனவரி 11 ஆம் தேதி 621 பேருந்துளும், ஜனவரி 12 ஆம் தேதி 892 பேருந்துகளும், ஜனவரி 13 ஆம் தேதி 2,080 பேருந்துகளும், ஜனவரி 14 ஆம் தேதி 3,225 பேருந்துகளும் என மொத்தம் 7,942 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மொத்தத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 9.1.2016 முதல் 14.1.2016 வரை 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 15.1.2016 முதல் 19.1.2016 வரை இயக்கப்படும்.
300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிப்பதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னையில் சிறப்புப் பேருந்துகள்
பொங்கல் பண்டிகையின் போது சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
காணும் பொங்கல் நாளான ஜனவரி 17 ஆம் தேதி மெரினா கடற்கரை, வண்டலூர், மகாபலிபுரம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

No comments:

Post a Comment