Thursday 21 January 2016

ஸ்மிருதி இரானி மீது எப்.ஐ.ஆர். பதியுங்கள்: ஹைதராபாத்தில் கேஜ்ரிவால் ஆவேசம்


ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் ஆய்வு மாணவர் தற்கொலை விவகாரத்தில் போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பெயரைச் சேர்க்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

ஹைதராபாத் வந்த கேஜ்ரிவால், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைச் சந்தித்து தனது ஆதரவை அவர்களுக்குத் தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நிரம்பிய கூட்டத்தில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், ஸ்மிருதி இரானி, தத்தாத்ரேயா மற்றும் எஃப்.ஐ.ஆர்.-ல் சேர்க்கப்பட்ட அனைவரையும் முதற்படி கைது செய்ய வேண்டும் என்றார்.

அம்பேத்கர் மாணவர் பேரவைக்கும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துக்கும் இடையே வன்முறை நிகழ்ந்ததாக ஆதாரங்கள் இல்லை. ஆனால், 2 நாட்களுக்குப் பிறகு அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பைச் சேர்ந்த சுஷில் குமார் மருத்துவமனையில் காயங்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் காயத்துக்கான மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்ற கேஜ்ரிவால், திடீரென தத்தாத்ரேயா எப்படி இதற்குள் நுழைந்து, பல்கலைக் கழகம், சாதிவாத, தீவிரவாத, தேசவிரோத அரசியலின் புகலிடமாக மாறிவிட்டதாக ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுத முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதன் தொடர்ச்சியாக, 5 மாணவர்களின் இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டவுடன் ட்வீட் செய்த கேஜ்ரிவால், “இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது குறித்து ஹைதராபாத் பல்கலை. மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். ரோஹித் தற்கொலைக்குக் காரணமானவர்கள் விரைவில் தண்டனை பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் சுரவரம் சுதாகர் ரெட்டி, செயலர் டி.ராஜா ஆகியோரும் போராட்டம் செய்து வரும் மாணவர்களைச் சந்தித்துப் பேசினர்.
டி.ராஜா கூறும்போது, “பெஷாவர் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு இரங்கல் வெளியிட பிரதமர் மோடிக்கு நேரம் இருக்கிறது, ஆனால் ரோஹித் தற்கொலை விவகாரத்தில் ஒரு இரங்கல் கூட தெரிவிக்க அவருக்கு நேரமில்லை” என்றார்.

No comments:

Post a Comment