Wednesday 20 January 2016

இறுதி வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் 5.79 கோடி வாக்காளர்கள் ; பெண் வாக்காளர்களே அதிகம்


தமிழ்நாட்டில் தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், இதில் ஆண் வாக்காளர்கள் 2.88 கோடியும், பெண் வாக்காளர்கள் 2.91 கோடியும், மூன்றாம் பாலினத்தவர் 4383 பேரும் உள்ளனர் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறி இருப்பதாவது:-

 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று (20.01.2016) வெளியிடப்பட்டுள்ளன. 1.01.2016-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 15.09.2015 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 15.09.2015ம் தேதியிலிருந்து 24.10.2015ம் தேதிவரை பெறப்பட்டன. மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்காக கீழ்க்கண்டவாறு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தீர்வு செய்யப்பட்டன.

பெயர் சேர்ப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 17,10,000. இதில் 16,18,526 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகியவற்றின் காரணமாக 3,85,293 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

திருத்தங்கள் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 2,67,400. இதில் ஏற்கப்பட்டவை 2,56,888. தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் தொடர்பாக பெற்றப்பட்ட விண்ணப்பங்கள் 1,29,712. இதில் 1,13,095 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

2016 சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.88 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.91 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4383) பதிவு செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016ல் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிகர வாக்காளர்களின் எண்ணிக்கை 12.33 இலட்சம் ஆகும். விண்ணப்பிக்கும்போது தங்கள் கைபேசி எண்ணை அளித்த சுமார் எட்டு லட்சம் வாக்காளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகின்றது. புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இவை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 10.02.2016 வாக்கில் வழங்கப்படும்.

இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் சிறப்பம்சமாக, அனைத்து முதன்முறை வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் 'வாக்காளர் வழிகாட்டி' என்ற தகவல் கையேடும் வழங்கப்படும். வாக்காளராகப் பதிவு செய்தல் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து எளிதாகப் புரியும் வகையிலான தகவல்கள் இந்தக் கையேட்டில் உள்ளன. மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 5,75,773 பேர் ஆவர். (ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45). 18-19 வயதுடைய இளைய வாக்காளர்களும் (12,797 பேர்) இத்தொகுதியில்தான் அதிகமாக உள்ளனர் (ஆண்கள் 7214, பெண்கள் 5583).

மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,63,189 பேர் ஆவர். (ஆண்கள் 81,038, பெண்கள் 82,151).

பணித்தொகுதி வாக்காளர் அதிகமுள்ள சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியாகும் (2402 பேர்). வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமானhttp://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. தகுதியுள்ள எவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தலைமைத்
தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment