Tuesday 29 September 2015

தூய்மை இந்தியா திட்டத்திற்கு பாடல் பாடிய சச்சின்: அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறதா ?




மும்பை: மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்றதும், தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் கடந்த ஆண்டு, மகாத்மா காந்தியின்  பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் 2ம் தேதியுடன் இத்திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு  பெறுகிறது. இதை முன்னிட்டு மத்திய அரசின் பிரசார பாடல் ஒன்றில், ராஜ்யசபா எம்பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர  வீரருமான சச்சின் குரல் கொடுத்துள்ளார். இசை அமைப்பாளர்கள் சங்கர்-ஈஷன்-லாய் கொண்ட மூவர் கூட்டணி இப்பாடலுக்கு இசை அமைத்துள்ளது.  இந்த பாடலை எழுத்தாளர் பிரசூன் ஜோஷி எழுதியுள்ளார். முகேஷ் பட் தயாரிக்கிறார். ஆனால் இதில் ஒரு சில வரிகளை மட்டுமே சச்சின்  பாடியுள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஓராண்டு நிறைவு தினமான வரும் அக்டோபர் 2ம் தேதி இப்பாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரபலமான சச்சின் மூலம் இந்த கீதம் பொது மக்களை எளிதில் சென்றடையும் என மத்திய நகர அபிவிருத்தி அமைச்சக அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். இதனிடையே ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்துவதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின் கூறியுள்ளார். இது  குறித்து அவர் மேலும் கூறுகையில், அனைத்து வகையான வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் நம்முடைய வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றன.

இன்னும் காலம் செல்ல செல்ல ஸ்மார்ட்போன்களில் ஏராளமான வசதிகள் வரும். மொபைல் போன்களின் வருகைக்கு பின்னால், தொலை தொடர்பு  மேம்படுத்தப்பட்டுள்ளது. பயணங்களின் போதும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது என்றார். மொபைல்போன்களின்  வருகைக்கு முன்னால், குடும்பத்தினரை தொடர்பு கொள்வது எவ்வளவு கடினமானது என்பதையும் சச்சின் நினைவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment