Wednesday 30 September 2015

மரபுகளை மீறி செயல்படுகிறது தமிழக அரசு: தமிழருவி மணியன் குற்றச்சாட்டு



சட்டப்பேரவை மரபுகளை மீறி தமிழக அரசு செயல்படுவதாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான நிதிக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்பதே சட்டப்பேரவை மரபாகும்.
பேரவையில் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படாததால் கடந்த மார்ச் மாதம் முதல் 6 மாதங்களுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. எனவே, ஒரு நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின் திட்டங்களை 6 மாதங்களில் முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. விதி 110-ன் கீழ் முதல்வர் புதிய திட்டங்களை அறிவிப்பதால் நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் இழந்துவிட்டது.
மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் மதுவின் மூலம் வரும் வருவாயை நுகர்வோர் குறைதீர்க்கும் நடைமுறைகளுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும். இல்லையெனில் மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முழுக்க முழுக்க மரபுகளை மீறி தமிழக அரசு செயல்படுவது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment