Saturday 19 September 2015

ம.தி.மு.க.வை உடைக்க ஒரு மாதம் முன்பிருந்தே திட்டமிட்டார் தி.மு.க வின் ஸ்டாலின்.. வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு





ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மு.க.ஸ்டாலின் ஈடுபட்டதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். ம.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் இன்று (சனிக்கிழமை) அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது... எங்கள் இயக்கத்தில் இருந்து அண்மையில் விலகிச் சென்ற கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணியின் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும், சேலம் மாவட்டத்தில் இருந்தும், காஞ்சி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான தோழர்கள் அங்கு கூட்டங்கள் நடத்தி அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கொண்டு வந்தார்கள். அவர்களை சந்தித்தப் பிறகுதான் நாங்கள் உயர்நிலைக் குழு கூட்டத்தை ஆரம்பித்தோம். ம.தி.மு.க. ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் உங்களை சந்திக்கிறது. இந்த இயக்கத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கூட்டப்பட்டு, அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்ற பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தீர்மானமாக அறிவிக்கப்பட்டன. இங்கு எடுக்கப்பட்ட முடிவுகளைத்தான் மாநாட்டில் என்னுடைய உரையில் தெரிவித்து, தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் எக்காரணத்தைக் கொண்டும் கூட்டணி அமைப்பதில்லை. மக்கள் நலக் கூட்டியக்கத்தை முன்னெடுத்துச் செல்வது என்று மாநாட்டின் பிரகடனமாக செய்யப்பட்டது. அதன் பின்னர் மதிமுகவின் காஞ்சி மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு அந்த முடிவை ஏற்க இயலாது என்று சில காரணங்களை சொல்லி வெளியேறி தி.மு.க.வில் இணைந்தார். ம.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. செயல்படுவதால் மக்கள் நல கூட்டியக்கத்தில் சேரலாம் என உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மதிமுக மாவட்ட செயலாளர்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். முல்லைப்பெரியாறு, ஈழத்தமிழர் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக, தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது. ஊழலாலும், குடும்ப அரசியலாலும் திமுக, தமிழகத்தை பாழாக்கிவிட்டது. திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் ஊழல் மயமாகிவிட்டது. இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

No comments:

Post a Comment