Tuesday 22 September 2015

எப்படியோ ? பொட்டு சுரேஷ் வழக்கு முடிந்தது... திருச்சி ராமஜெயம் கொலைவழக்கு என்னாச்சு? அரசியல் கட்சியினர் திசை திருப்பப்படுமா ?

எப்படியோ பொட்டு சுரேஷ் வழக்கு முடிந்தது ? திருச்சி ராமஜெயம் கொலைவழக்கு என்னாச்சு? அரசியல் கட்சியினர் திசை திருப்பப்படுமா ?
தமிழக அரசுக்கு தலைவலியாக இருந்த இரண்டு வழக்குகள் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மற்றும் அழகிரியின் நிழலாய் வலம் வந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்குகள். இன்று மும்பையில் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளதால் பொட்டு சுரேஷ் கொலைவழக்கு தொடர்பாக போலீஸாருக்கு இருந்து  வந்த தலைவலி முடிவுக்கு வந்துள்ளது. இதேபோல் ராமஜெயம் கொலை வழக்கையும் முடிப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

பொட்டு சுரேஷ் கொலையாவதற்கு எட்டு மாதங்களுக்கு முன், 2012 மார்ச் 29 ந்தேதி, திருச்சி- கல்லணை சாலையில், திருவளர்ச் சோலை அருகே காவிரி ஆற்றின் கரையில், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 8 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டும், இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில், வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் ராமஜெயம் கொலைக்கு காரணமாக ரவுடி குரூப், தொழில் போட்டி, அரசியல் எதிரிகள், ராமஜெயத்தால் அவமதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களைத் தேடிப்பிடித்து  விசாரித்தும், எந்த ‘க்ளுவும் கிடைக்காத நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கடந்த டிசம்பர் மாதம் ராமஜெயத்தின் மனைவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில்,  "வழக்கின் குற்றவாளிகளை நாங்களே கண்டுபிடித்துவிடுகிறோம்" என பல முறை அவகாசம் கேட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு, வரும் அக்டோபர் 28 ந் தேதிவரை அவகாசம் கொடுத்துள்ளது உயர் நீதிமன்றம்.  

இந்தக்கெடு முடிவதற்குள்  ராமஜெயம்  கொலை வழக்கை முடிக்க நினைக்கும் சிபிசிஐடி போலீசாருக்கு, கடைசி நம்பிக்கையாக உள்ளது உண்மையறியும் சோதனைதான்.

கடந்த 23, 24 தேதிகளில் ராமஜெயத்தின் உதவியாளர்களாக இருந்த கேபிள் மோகன், திருச்செங்கோடு நந்து ஆகிய இருவரிடம் உண்மையறியும் சோதனை நடத்தினார்கள். சோதனையில் கேட்கப்பட்ட 83 கேள்விகளுக்கு இவர்கள் சொன்ன பதிலை வைத்துக்கொண்டு தொடர் விசாரணையை நடத்திவரும் சிபிசிஐடி போலீஸாரின் பார்வை, மீண்டும் ராமஜெயத்தின் வலதுகரமாக வலம் வந்த வினோத் மற்றும் அவரை சார்ந்தவர்களை விசாரணைக்கு எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் வினோத், கோபால்ராஜ், வினோத்தின் நண்பன் ஸ்ரீரங்கம் சங்கீத், முல்லைக்குடி சண்முகம் ஆகியோர்தான் இப்போதைய  சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருப்பவர்கள். இவர்கள் மட்டுமல்லாமல் ராமஜெயத்தின் உதவியாளர்களாக இருந்த  வேலு, அமுதன் ஆகியோரும் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் பதில்களை  உண்மையறியும் குழுவில் சொல்லப்படும் தகவல்களையும் ஒப்பிட்டு பார்த்து வருகின்றார்கள். இவர்கள் இல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி மணி என்பவரிடம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

ராமஜெயம் வாக்கிங் சென்றது உண்மைதான்

விசாரணையில் நீதிபதி மணி, “ கடத்தி கொலை செய்யப்பட்ட மார்ச் 29-ந்தேதி காலை 5.30மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்ததாக சொல்லப்படும்  ராமஜெயம், வாக்கிங் வந்ததை பார்த்தேன். அவர் என்னிடம் பேசிவிட்டுதான் போனார்” என்று உறுதியாக சொன்னாராம். பலமுறை இதை சொல்லியும் போலீஸார், இல்லையில்லை அவர் முதல் நாள் இரவே கொலை செய்யப்பட்டு விட்டார் என்றெல்லாம் சொல்லி கையெழுத்து வாங்கினார்கள். 

“எங்கு வேண்டுமானாலும் போடுகிறேன். ஆனால் நீதிமன்றத்தில் விசாரணையின்போது உண்மையை மட்டும்தான் சொல்வேன்' என இப்போதும் சொல்ல, அதிர்ந்துபோன போலீஸார், ராமஜெயம் அதிகாலை வாக்கிங் போனபோதுதான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அவர் முதல்நாள் இரவு கடத்தப்பட்டார் என சொல்லப்பட்டவை எல்லாம் அப்போதைய விசாரணை அதிகாரிகள் கிளப்பிய வதந்திகள் என உறுதியாகியுள்ளது.

மேலும் வழக்கமாக வாக்கிங் செல்ல அதற்குரிய பேண்ட் டி-சர்ட்டில் போகும் ராமஜெயம், அன்று லுங்கியோடு போனது ஏன், அவருக்கு நெருக்கமானவர்கள் போன் செய்து அவசரமாக அழைத்திருக்க வேண்டும் அதனால்தான் ராமஜெயம் பதற்றத்துடன் கிளம்பியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் சிபிசிஐடி போலீஸார்.

“ராமஜெயம், காணாமல் போன அன்று, 7.30 மணிக்கே வினோத்தின் நண்பன் ஶ்ரீரங்கம் சங்கீத் என்பவனுக்கு நந்து போன் செய்து தகவலை சொல்லி இருக்கிறான். இதே நேரம் வினோத்தின் அப்பா கோகுல் ராஜ், ராமஜெயம் வாக்கிங் போய்விட்டு வந்து ஷெட்டில் இறகு பந்து விளையாடும் கிரவுண்டில் இருந்துள்ளார். இவர்களுக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கின்றதா என்பதுதான் இப்போது தெளிவாக வேண்டிய உண்மை..

கூடவே வினோத் பதில்களும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.  அவரது தந்தை கோகுல்ராஜை அடுத்து உண்மையறியும் சோதனைக்கு உட்படுத்த இருக்கிறோம். இந்த கொலைக்கு விசாரணை அதிகாரியாக இருந்த முன்னாள் ஸ்ரீரங்கம் ஏசியும் மன்னார்குடி திவாகரன் சம்மந்தியுமான ஜெயச்சந்திரன் மீதும் சந்தேகம் உள்ளது. இவர்களுக்கு தெரியாமல் ராமஜெயம் கொலையில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை” என சொல்லும் போலீசார், சாமிரவி எனும் பிரபலமான ரவுடிக்கு இந்த கொலைவழக்கில் சம்மந்தம் இருக்கலாம் என நம்புகிறார்களாம். எனவே நிச்சயம் ராமஜெயம் கொலை வழக்கு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இந்த கொலை வழக்கில் ராமஜெயத்தின் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நெருங்கிய சொந்தங்கள் துணை இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதை விரைவில் உறுதிபடுத்துவோம் என்கிறார்கள்.

வருகின்ற அக்டோபர் 28-ம் தேதிக்குள் மதுரை உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி யார் என்று நிரூபிக்க வேண்டும் கட்டாயத்தில் இருக்கிறார்கள், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார். இதனால் ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் கடந்த சில வாரங்களாக அனைத்தையும் தொகுத்து விஞ்ஞானப் பூர்வமாக அறிக்கை தயாரிக்கிறார். நிச்சயம் குற்றவாளிகள் குறித்த தகவல்களை உயர் நீதிமன்றத்தில் சொல்வோம் என்கிறார்கள் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள்.

ராமஜெயம் வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பதும், அது நிச்சயம் இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாக இருக்குமா என்பதும் அக்டோபர்  28 ந்தேதி தெரிந்துவிடும். 

No comments:

Post a Comment