Monday 31 August 2015

ஒகேனக்கல் விபத்து எதிரொலி - பலியான 6 பேருக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

30.8.2015 அன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் ஆற்றில் தொம்பச்சிக்கல் என்ற இடத்தில் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த பரிசல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பரிசலில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி, கெளரி, ரஞ்சித், கோகிலா, இரண்டரை வயது குழந்தை தர்ஷன், பத்து மாதக் குழந்தை சுதிப்தா ஆகியோர் நீரில் மூழ்கினர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
நீரில் மூழ்கியவர்களில் கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித், கெளரி, குழந்தை தர்ஷன் ஆகியோரின் உடல்கள் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீரில் மூழ்கிய கோகிலா மற்றும் குழந்தை சுதிப்தா ஆகியோரின் சடலங்களை விரைவாக மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறும், உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகத்திற்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட காவல்துறைக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment