Monday 24 August 2015

ம.தி.மு.க. வழக்கு: தமிழகத்தின் ஐந்து அணைகளில் தூர் வாரும் பணி வைகோ பாராட்டு



தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அவர்கள் திருவைகுண்டம் அணையில் தூர் வாரக் கோரித் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையாகத் தூர் வார வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பு ஆயம் ஏற்கனவே ஆணை பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 24 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எடுத்துரைத்த வாதம் பின்வருமாறு:
திருவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணியை பருவ மழை தொடங்குவதற்கு முன்பு வேகமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆயம் ஆணை பிறப்பித்து இருந்த போதிலும் இன்னமும் பணிகள் முறையாகத் தொடங்கப்படவில்லை.
நேற்று முன்தினம் மனுதாரர் ஜோயல் அணையை பார்வையிட்டார். அங்கே பணிகள் நத்தை வேகத்தில்தான் நடைபெறுகின்றன. அணைக்கட்டு அமைந்துள்ள இடத்தில் இருந்து 900 மீட்டர் தூரம் வரை ஒரு கட்டமாகவும், மீதம் உள்ள பகுதியைஅடுத்தடுத்த கட்டங்களாகவும் மேற்கொள்ளப் பொதுப்பணித்துறையினர் திட்டம் வகுத்துள்ளனர். முதல் கட்டத்தில் இருந்து ஒரே சீராக இரு கரைகளுக்கு உட்பட்ட பகுதியில் தூர்வரும் பணியை வேகமாகச் செய்து முடிக்க பொதுப்பணித்துறைக்குத் தீர்ப்பு ஆயம் அறிவுறுத்த வேண்டுகிறேன்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அணைக்கட்டுகள், அனைத்துக் குளங்களிலும் தூர் வாரும் பணியைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பு ஆயம் ஆணை பிறப்பித்தது. அந்த அடிப்படையில் திருவைகுண்டம் அணை நீர் பாசனம் பெறும் 53 குளங்களிலும் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியவுடன், ‘திருவைகுண்டம் அணை தூர் வாரும் பணியோடு 53 குளங்களிலும் தூர்வாரும் பணி நடைபெறும் என்று பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் கூறினார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தீர்ப்பு ஆயத்தில் தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் இதுகுறித்து அனுப்பியுள்ள கடிதத்தைத் தீர்ப்பு ஆயத்தில் தாக்கல் செய்தார். அதன்படி தமிழ்நாட்டில் திருவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி நடைபெறுவது போல, தேனி மாவட்டத்தில் வைகை அணை, குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை, திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஆகிய ஆக ஐந்து அணைகளிலும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்துசெய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, “மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில் தீர்ப்பு ஆயம் தந்த ஆணையால், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஐந்து அணைகளில் தூர்வாரும் பணியைச் செய்ய தமிழக அரசு முன்வந்ததை மனதாரப் பாராட்டி வரவேற்கிறேன்” எனத் தெரிவித்தார்.
காவிரி தீரத்தில் சேல் பாறை எரிவாயு திட்டம் பேராபத்து
பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்
காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பது குறித்து பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நடைபெறும் வழக்கில் இப்பிரச்சினை குறித்துத் தீர்ப்பு ஆயத்துக்கு ஆலோசனையாகக் கருத்துகளைக் கூறுமாறு வழக்கறிஞர் வைகோ அவர்களைத் தீர்ப்பு ஆய நீதிபதி நீதியரசர் ஜோதிமணி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ அவர்கள் கூறியது:
எரிவாயு எடுக்கும் பிரச்சினை தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. காவிரி தீரத்தையே அடியோடு பாழாக்கும் விதத்தில் சேல் கேஸ் எனப்படும் படிமப் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மிகத் தந்திரமாகச் செயல்படுத்துகின்றனர். பொதுவாக இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கு மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் முன்பு பெற்று இருந்த பழைய அனுமதியையை வைத்துக்கொண்டே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளார்கள் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
ஐரோப்பாவில் 9 நாடுகளிலும், அமெரிக்காவில் 2 மாநிலங்களிலும் சேல் கேஸ் எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறை எரிவாயு எடுப்பதற்குப் பத்தாயிரம் அடி ஆழத்துக்குக் குழி அமைத்து, அதற்கும் கீழே பக்கவாட்டில் குழிகள் அமைத்து 600க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்களைத் தண்ணீரோடு கலந்து பூமியின் ஆழத்தில் செலுத்துவதாலும், பின்னர் வெளியேற்றப்படும் கரைசல் நீரில் உள்ள நச்சுத்தன்மை விளை நிலங்களைப் பாழாக்கும்; பூகம்பம் ஏற்படும்.
இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குத் தமிழ்நாட்டின் காவிரி தீரத்தைப் பலிகடா ஆக்கும் திட்டம்தான் சேல் கேÞ திட்டம் ஆகும்.
இதைவிடக் கொடுமை யாதெனில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசு சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்குத் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் 2,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டப்போவதாகவும், இந்தப் பகுதியில் விவசாய விளை நிலங்களே இல்லை என்றும் அக்கிரமமாகப் பொய் கூறி இருக்கின்றது.
பாறை எரிவாயு திட்டத்தின் ஆபத்து குறித்து இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் விளக்கமான கட்டுரை வந்துள்ளது. அப்பத்திரிகையின் பிரதியை தீர்ப்பு ஆயத்தின் பார்வைக்கு வைக்கிறேன் என்று கூறினார்.
தீர்ப்பு ஆய நீதிபதிகள் அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தனர்.
இந்த வழக்க்கு விசாரணையையும் செப்டம்பர் 10 தேதிக்கு ஒத்தி வைத்து அறிவித்தனர்.

No comments:

Post a Comment