Friday 28 August 2015

அதிமுக, திமுக இல்லாத புதிய கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நம்பிக்கை





செப் -2 அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில்  மாபெரும் பொதுக்கூட்டம்  கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல் தலைமை வகித்தார். சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர்  அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பக்கிரப்பா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். 

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம்  மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் துரை. ரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற  உறுப்பினர் பேராசிரியர். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தில் அதிமுக, திமுக இல்லாத ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த இந்த 5 கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்றனர். 

இதையெடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், கூட்டமைப்பு எப்படி செயல்பட வேண்டும் என்பதனை திட்டத்தினை வகுத்து செயல்படுத்துகிறோம், மலரட்டும் தமிழகத்தில் புதிய ஆட்சி, அதிமுக, திமுக அல்லாத இரண்டு கட்சிகளும் பங்கு கொள்ளாத கூட்டணி ஆட்சியை மக்கள் நலக்கூட்டியக்கம் அமைக்கும், இந்த கூட்டணி பஞ்சபாண்டவர்கள் போல என்றைக்கு ஒற்றுமையுடன் நிலைத்து நிற்கும். கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கும் வேளையில் கட்டபொம்மன், ஊமைத்துரை அடைத்து வைத்திருந்த கட்டிடம் பழடைந்து கிடக்கும் இடத்தினை சீரமைத்து மண்டபம் அமைக்க வேண்டும். 

12 கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கங்கள் வரும் 2ந்தேதி நாடு தழுவிய முழு வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அதற்காக முதல்வரை சந்திக்க நான் கடிதம் எழுதினேன், ஆனால் 40 நாள்கள் ஆகியும், கடிதத்திற்கு பதில் அனுப்பவில்லை, சந்திக்க நேரமும் ஒதுக்கவில்லை, மத்தியில் பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் எதிர்த்தவன் நான், விவசாயிகள் பிரச்சினை குறித்து நான் விவாதிக்க நேரம் ஓதுக்க பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினேன். அரசியலில் எதிர்களாக இருந்தாலும் நான் சந்திக்க நேரம் ஒதுக்கி சந்தித்தார். 

ஆனால் அந்த நிலை தமிழகத்தில் இல்லை. மோடி அரசினால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மை இல்லை. பிரதமர் மோடி கர்பரேட் நிறுவனங்களுக்கு தான் பிரதமர், ஏழை,எளிய மக்களுக்கு அல்ல. நான் சந்தித்த போது நில எடுப்பு மசோதவை மறுபரிசீலனை செய்வதாக பிரதமர் என்னிடம் தெரிவித்து இருந்தார். மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் பேசுகையில் நில எடுப்பு மசோதவை திரும்ப பெற இருப்பதாக தெரிவித்தார். திருவைகுண்டம் அணையில் தூர்வார கோரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்களை திரட்டி தூர்வார போவதாக அறிவித்தவுடன் தமிழக அரசு அந்த பணிகளை மேற்கொண்டுள்ளது. 

இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காவிரியில் அணை கட்டுவேன் என்று பேசி வரும் மத்திய அமைச்சர் சதனாந்தகவுடாவை நீக்க வேண்டும். நாங்கள் மக்கள் பிரச்சினைக்காக போராடுகிறோம். ஆனால் எங்களை சந்திக்க முதல்வருக்கு சந்திக்க நேரமில்லை ஊழல் சதுப்பு நிலத்தில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும். மக்கள் மனநிலையில் இலவசங்கள் ரெம்ப நாளைக்கு எடுபடாது. மதுவினால் இன்றைக்கு தமிழகம் சீரழிந்து வருகிறது. மதுவினால் பல வித நோய்களுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு கொண்டு உள்ளனர். 

சசிபெருமாள் இறக்கவில்லை, கொல்லப்பட்டார். மதுவினை ஒழிக்க அரசியல் கட்சிகளால் முடியாது, மாணவர்கள், பொது மக்களால் மட்டுமே முடியும், மருத்துவ துறையிக்கு பல நல்ல திட்டங்களை அறிவிக்கு முதல்வர், மக்கள் நலன் காக்க மதுவிலக்கினை அமுல்படுத்த வேண்டும், மாற்றங்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் தமிழக மக்களுக்கு இந்த 5 கட்சிகள் கொண்ட மக்கள் நல கூட்டியக்கம் அந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் என்றார்.

இதில் மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஸ், நகர செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ், மதிமுக நிர்வாகிகள் கணேசன், பவுன்மாரியப்பன், சிவக்குமார், எரிமலை வரதன், நகர்மன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், ராஜேந்திரன், சரவணன், பொன்ஸ்ரீராம், கோடையிடிராமசந்திரன், சிபிஎம்  நிர்வாகிகள் மல்லிகா, சீனிவாசன், முருகன், முத்துகாந்தாரி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜோதிபாஸ், முத்துராஜ், முத்துலெட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் பரமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தமிழ்இனியன், கருப்பசாமிபாண்டியன், மனித நேய மக்கள கட்சி நிர்வாகிகள் ஜோசப்நெலோஸ்கோ, ஆஸாத், மில்லத்இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment