Thursday, 8 October 2015

அணுசக்தியை ஜெயலலிதா நாடுவது ஆபத்தை ஏற்படுத்தி விடும்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் உதயகுமாரன் எச்சரிக்கை

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு காரணமாக ஆபத்தான அணுசக்தியை முதல்வர் நாடுவது ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடும் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பஉதயகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சாதி மத பேதம், ஊழல், மது, கார்ப்பரேட், கொள்ளையற்ற அணுத்தீமை இல்லாத மாநிலம் படைப்போம் என்ற முழக்கத்தோடு அகில இந்திய மக்கள் மேடை என்ற அமைப்பின் தமிழ் மாநில மாநாடு நெல்லையில் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமாரன், இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் அணுஉலையில் எதற்காக மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. அந்த அணுஉலையில் மின்உற்பத்தியை தொடங்க பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2வது அணுஉலையிலும் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்த அணுஉலைகளில் தரம்மற்ற உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்து வந்தோம். முதல்வரும் இலைமறை காயாக இதனையே பிரதமரிடம் கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவே நினைக்கிறோம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உண்மை நிலை குறித்து மத்திய அரசிடம் இருந்து வெள்ளை அறிக்கையை பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணுஉலைக்காக 40 கோடி ரூபாய் அளவிற்கு டீசல் வாங்கப்பட்டுள்ளது. அப்படியானால் அணுசக்தி மூலமாகத்தான் அங்கு மின்உற்பத்தி தயாரிக்கப்பட்டதா என்பதை அணுசக்தி துறை விளக்க வேண்டும். இந்த விவரங்களையும் முதல்வருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். முதல் இரு அணுஉலைகள் செயல்படாத நிலையில், 3வது, 4வது அணுஉலைகளை தொடங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்துமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

இருப்பினும், தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு காரணமாக ஆபத்தான அணுசக்தியை முதல்வர் நாடுவது ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடும். தரமற்ற உபகரணங்களை பயன்படுத்தியதால்தான் 90 நாட்களுக்கு மேலாக முதல் அணுஉலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை எல்லாம் வெளிக்கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment