Tuesday 20 October 2015

கிரிக்கெட் - சர்வதேச போட்டிகளில் இருந்து விரேந்திர சேவாக் ஓய்வு டிவிட்டரில் அறிவிப்பு



சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கையில்  கூறியது:
என்னுடைய 37-வது பிறந்தநாளின் போது ஓய்வு பெறவேண்டும் என்று முன்பு நினைத்திருந்தேன். அதேபோல சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிக்கிறேன்.
கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. இந்தியாவுக்காக விளையாடியது மறக்கமுடியாத பயணம். என்னுடைய எல்லா கேப்டன்களுக்கும் நன்றி. என் மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி.
இன்றைய தினத்தில் என் தந்தையை மிகவும் நினைக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கும்போது என்னுடன் இருந்தார். இன்று அவர் என்னுடன் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. அவர் எங்கு இருந்தாலும் என்னைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.
எனக்கு ஆலோசனைகள் கூறிய அனைவருக்கும் நன்றி. மற்றும் அந்த ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ளாததற்கு மன்னிக்கவும். அதற்கு ஒரு காரணம் உண்டு. நான் என் பாணியில் ஆடினேன்.
எனக்கு ஆதரவளித்த பிசிசிஐ, இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், செய்தியாளர்கள் என அனைவருக்கும் நன்றி என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பல பேட்ஸ்மேன்கள் களமிறங்கியிருந்தாலும், தனக்கே உரிய அதிரடி ஆட்டத்தின் மூலம்  தனியிடத்தைப் பிடித்தவர் சேவாக்.
டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் அவர்.  மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சேவாக், 23 சதங்கள், 32 அரை சதங்கள் விளாசி மொத்தம் 8,586 ரன்களைக் குவித்துள்ளார். 251 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,273 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 சதங்களும், 38 அரை சதங்களும் அடங்கும்.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளன. அந்தப் போட்டியில் சேவாக் விளையாட உள்ளார்.

No comments:

Post a Comment