Thursday, 8 October 2015

வாள்வீச்சு வீராங்கனைக்கு வெளிநாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிதி உதவி - ஜெ அதிரடி


சென்னையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனைக்கு, வெளிநாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானிதேவி, 2014-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதோடு, இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

 இதுமட்டுமின்றி, காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது சி.ஏ.பவானிதேவி, 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சி.ஏ.பவானிதேவி இந்த மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ள நிதியுதவி வழங்கிட வேண்டுமென்று எனக்கு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார். அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்று இந்த மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் சி.ஏ.பவானிதேவி கலந்துகொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், சி.ஏ.பவானிதேவி, வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment