தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மாதம் 24–ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் போது துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதையடுத்து சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 4–ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக சட்டசபைக்கு 1 வாரம் விடுமுறை விடப்படுவதாகவும் வருகிற 14–ந்தேதி சட்டசபை மீண்டும் கூடும் என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.
அதன்படி சட்டசபை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. நாளை சட்டசபை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பின்னர் வருவாய், செய்தி– விளம்பரத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.
காவல், தீயணைப்பு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் வருகிற 22–ந்தேதி நடக்கிறது. இந்த விவாதங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளிக்கிறார். புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார். வருகிற 29–ந்தேதியுடன் சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை குறித்து சட்டசபையில் கடந்த வாரம் விவாதிக்கப்பட்டது. அவரிடம் இருந்து உரிய விளக்கத்தை பெற 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை கருணாநிதி விளக்கம் அளிக்கவில்லை. ஓரிரு நாட்களுக்குள் அவர் விளக்கம் அளிப்பார் என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது விளக்கத்தை தொடர்ந்து உரிமை மீறல் குழுவின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
சபை உரிமை மீறல் குழுவின் அறிக்கை நாளை சட்டசபையில் தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை சட்டசபையில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:
Post a Comment