Saturday, 12 September 2015

7243 பேருக்கு செவிலியர் பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
நோயில்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில், மருத்துவத் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவ மனைகளுக்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குதல், மருத்துவத் துறைக்கு தேவையான மனித வளத்தை வழங்குதல் போன்ற திட்டங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சாராப் பணியாளர்களை உடனுக்குடன் தேர்வு செய்து நியமனம் செய்யும் பொருட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக் கிணங்க மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் 2.1.2012 அன்று அமைக்கப்பட்டு, மருத்துவப் பணியாளர்களின் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 5578 மருத்துவர்கள் மற்றும் 1374 மருத்துவம் சாராப் பணியாளர்கள், இத்தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவத் துறையில் செவிலியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வளர்ந்து வரும் மருத்துவப் பிரிவுகளில் தேவைக்கேற்ப தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மையங்கள், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகள் 24X7 மணிநேர பிரசவ சேவை, மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பிரிவு, நோயுற்ற பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், மத்திய அரசின் இராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யக்கிரம் போன்ற பல திட்டங்களில் காலியாக உள்ள 7243 செவிலியர் பணியிடங்களை மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்திட தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.
அந்த ஆணைக்கிணங்க, காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து விண்ணப்பித்த 40,465 நபர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு 7243 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 7243 நபர்களுக்கு செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7.9.2015 அன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், செயலாளர் ராதாகிருஷ்ணன், முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், குடும்பநலத் துறைசிறப்புச் செயலாளர் செந்தில் குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment