Saturday, 12 September 2015

மத்தியப் பிரதேசத்தில் சிலிண்டர் விபத்தில் 82 பேர் பலி: 50-க்கும் மேற்பட்டோர் காயம் - ஊரே சோகத்தில் மூழ்கிய சம்பவம்



மத்தியப் பிரதேச மாநிலத்தில் உணவு விடுதியில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் இதுவரை 82 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் குறித்து பெட்லாவாட் சரக போலீஸ் சப் டிவிசனல் அலுவலர் ஏ.ஆர்.கான் கூறும்போது, "ஜப்புவா மாவட்டத்தில் ஓர் உணவு விடுதி இருக்கிறது.
இந்த விடுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 82 பேர் பலியாகினர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலிண்டர் விபத்தால் அருகிலுள்ள கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளன" என்றார்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மாநில பழங்குடியின நலவாரிய அமைச்சர் அந்தா சிங் ஆர்யாவும் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசம் ஜபுவா மாவட்டத்தில் சிலிண்டர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிலிண்டர் விபத்தில் ஏராளமானோர் பலியானது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
82 உயிர்களை பறித்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலர் அந்தோனி தேசா இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்வார் எனத் தெரிவித்தார்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் அளிக்கப்படும் என முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் கூறும்போது, "சிலிண்டர் வெடித்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும் அதன் காரணமாக உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment