Sunday, 13 September 2015

மதுரை அருகே கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் இருந்து எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு





மேலூர் அருகே கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் தோண்டும் பணி நேற்று முதல் நடைபெற்று வந்தது. சட்ட ஆணையர் சகாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த பணியின் போது எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இயங்கி வந்த குவாரிகள் முறைகேடு செய்ததில் அரசுக்கு பல ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி., சிந்து, ஒலம்பஸ் உள்பட ஏராளமான கிரானைட் நிறுவனங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 
இதுகுறித்து விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே பூமாலை வணிக வளாகத்தில் அலுவலகம் அமைத்து சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 20 கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மேலூர் அருகே சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடையில் சுடுகாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட 2 பேர் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டு இருப்பதாக கீழவளவை சேர்ந்த சேவற்கொடியோன் என்ற பிரபு (வயது 35) ஏற்கனவே மதுரை கலெக்டராக இருந்த அன்சுல்மிஸ்ரா, அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும், பின்னர் சகாயத்திடமும் புகார் கொடுத்து இருந்தார். 
இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக, சகாயம் குழுவினர் நேற்று காலையில் மணிமுத்தாறு ஓடை சுடுகாடு பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்களை சேவற்கொடியோன் என்ற பிரபு சந்தித்தார். அப்போது சகாயத்திடம் சேவற்கொடியோன் நரபலி கொடுக்கப்பட்ட விவரங்களை கூறினார். இதையடுத்து நரபலி கொடுக்கப்பட்டு அந்த உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை சகாயம் குழுவினரிடம் அவர் காண்பித்தார். இதையடுத்து அந்த இடத்தை தோண்டும் பணி நேற்று துவங்கியது.
இந்த நிலையில், சகாயம் முன்னிலையில் இன்று காலை மீண்டும் தோண்டும் பணி துவங்கியது. இன்று காலை தோண்டப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை  5 எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவற்றை மருத்துவ குழுவினர் சேகரித்து வருகின்றனர்.நரபலி கொடுக்கபட்டதாக கூறப்பட்ட இடத்தில் உடல்கள் புதைக்கப்பட்டு எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment