Sunday, 13 September 2015

சகாயம் குழுவுக்கு அரசின் ஒத்துழைப்பு முழுமையாக இல்லை: மார்க்சிஸ்ட், திமுக கடும் குற்றச்சாட்டு



கிரானைட் குவாரி முறைகேடுகளை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் குழுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரிக்கச் சென்ற சகாயம் குழுவினருக்கு காவல்துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. தடயங்கள் மறைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் இரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ளார்.
இத்தகைய கடும் போராட்டத்துக்கு பிறகு தடயவியல் அதிகாரிகள் அந்த பகுதியை தோண்டியதில் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இப்படி காவல்துறையின் ஒத்துழைப்பை போராடி பெற வேண்டிய நிலை சகாயத்துக்கு ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும். சகாயம் குழுவின் விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் நடந்து கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விசாரணைக்கு தமிழக அரசும், காவல் துறையும் முழு ஒத்துழைப்பு அளித்து குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்த வேண்டும்" என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சகாயம் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்காத தமிழக அரசு ஒரு செயல்படாத அரசாகவே நடந்துகொள்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment