Tuesday 24 November 2015

திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்: 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது – பாதுகாப்பு தீவிரம்



பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தீப திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு 2, 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்டதான்என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடி இருக்கும் பக்தர்கள்அண்ணாமலைக்கு அரோகராஎன்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள்.
மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்கு போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீடுகளின் முன்பும் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.
மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல் விளக்கு ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள்.
கார்த்திகை தீப திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
நாளை திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ வசதி செய்யப்பட்டு உள்ளது. கோவில், கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. குப்பைகளை கீழே போடாமல் இருக்க அனைத்து பகுதிகளிலும் குப்பை கூடைகள் வைக்கப்பட்டு உள்ளன. அன்னதானம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 8 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். கோவில் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் ஆளில்லாத குட்டி விமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்படுகிறது. இது தவிர பல்வேறு நவீன சாதனங்கள் மூலம் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுகின்றனர்.
மகாதீபம் ஏற்றும் மலை உச்சியில் கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள்.
கிரிவலப்பாதையில் 36 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. திருட்டை தடுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றப்பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை மகாதீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏற்கனவே பக்தர்கள் வந்து குவிய தொடங்கிவிட்டனர்.
அவர்கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். இதனால் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன.
திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதிகளில் எங்குபார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் சென்றபடி உள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கூட்டத்தை முன்னிட்டு உணவு விடுதிகள், ஓட்டல்கள், சத்திரங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா, சுகாதாரம் பேணப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment