Tuesday 24 November 2015

சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை மழை விடுமுறை




மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இதேபோல், மழை காரணமாக புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, மாலத்தீவில் ஏற்கெனவே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைந்துவிட்ட நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை வாய்ப்பு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெரும்பாலான மக்கள் பள்ளிகளில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடங்கள் உடனடியாக திறக்கப்படும் பட்சத்தில், அந்த மக்களுக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டியதும் கட்டாயத் தேவையாகிறது.
பள்ளிகளில் வேலை நாட்களை நீட்டிக்க முடிவு?
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வருவதால் ஆண்டு இறுதியில் வேலை நாட்களை நீட்டிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் ஆண்டுதோறும் கண்டிப்பாக குறிப்பிட்ட நாட்கள் இயங்க வேண்டும். அதன்படி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 220 நாட்களும், அதேபோல், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நாட்களும் வேலை நாட்கள் ஆகும். வேலைநாள் கணக்கீட்டுக்கு அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் கல்வி ஆண்டையும் (ஜூன்-மே) தனியார் பள்ளிகள் காலண்டர் ஆண்டையும் (ஜனவரி-டிசம்பர்) கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
தற்போது கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு இதுவரை 17 நாட்கள் (சனி, ஞாயிறு நீங்கலாக) விடுமுறை விடப்பட்டுள்ளன. இதுபோன்ற எதிர்பாராத விடுமுறை நாட்களை சரிசெய்ய சனிக்கிழமைகளில் வகுப்பு வைத்துக்கொள்வது வழக்கம். பருவ மழைக்காலம் டிசம்பர் வரை இருப்பதால் இன்னும் விடுமுறைவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, மழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்களை சரிசெய்வதற்காக அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்யலாமா? என பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது. ஒருவேளை இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும்.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் இறுதி வாரத்தில் ஏறத்தாழ 10 நாட்களுக்கு விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மழைக்காக தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "கனமழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்களை சரிகட்ட அரையாண்டுத் தேர்வு விடுமுறை ரத்துசெய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட வேலை நாட்கள் குறையும்பட்சத்தில் ஆண்டு இறுதியில் வேலை நாட்களை நீட்டித்துக்கொள்ளலாம்" என்றனர்.
தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரப்பூர்வமாக அரசு விடுமுறை விடப்பட்டாலும் கூட சில தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை தினமும் பணிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment