Sunday 29 November 2015

பெரியாறு, அமராவதி அணைகளிலிருந்து நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு


பெரியாறு மற்றும் அமராவது அணைகளிலிருந்து நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாயக்கால்களின் கீழ் உள்ள ஓரு போக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாயக்கால்களின் கீழ் உள்ள ஓரு போக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக 30.11.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம், தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும்;

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 30.11.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா

No comments:

Post a Comment